தமிழ்நாடு

மருத்துவமனையில் செவிலியருக்கு அரிவாள் வெட்டு - தாய்மாமன் வெறிச்செயல்

rajakannan

காஞ்சிபுரத்தில் பயிற்சி செவிலியர் ஒருவர் மருத்துவமனைக்குள்ளாகவே அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாகர் கோயிலுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜெயந்தி என்பவர் பயிற்சி செவிலியராக பணியாற்றி வருகிறார். இன்று அவர் வழக்கம்போல் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 22 வயது மிக்க இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்குள் மதுபோதையில் நுழைந்துள்ளார். செவிலியர் ஜெயந்தியிடம் சென்ற இளைஞர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டியுள்ளார். உடனே ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். வெட்டிய இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

பின்னர், அருகில் இருந்த செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயந்தியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி சம்பவ இடத்தில் உடனடியாக நேரில் ஆய்வு செய்தார். போலீசார் விசாரணையில், செவிலியர் ஜெயந்தியை அரிவாளால் வெட்டியது அவரது தாய்மாமன் முத்து என்பது தெரியவந்துள்ளது. 

தாய்மாமன் முத்து திருமணம் செய்ய நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்ததாகவும், அதனை ஜெயந்தி மறுத்து வந்ததாகவும் தெரிகிறது. அதாவது வேலை ஏதும் இல்லாமல் சுற்றித்திரிந்ததால் முத்துவை திருமணம் செய்துகொள்ள அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முத்து மதுபோதையில் மருத்துவமனைக்கே சென்று தாக்கியுள்ளதாக தெரிகிறது.

செவிலியரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற தாய்மாமன் முத்துவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், பட்ட பகலில் மருத்துவமனைக்குள் செவிலியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.