தமிழ்நாடு

'வீர சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள்?'- சீமான் கேள்வி

webteam

''திமுக அரசு குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது'' என்றுள்ளார் சீமான்.

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியனரோடு மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து மேடையில் உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''குடிவாரி கணக்கெடுப்பு தான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பும், மொழி்வாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும். குடிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்குங்கள். நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யை விட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய். தாழ்த்தபட்டோர் என யாரையாவது கூறினால் நான் அதை ஏற்கவே மாட்டேன். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தும்கூட ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வைரமுத்துவை சுடிதார் கவிஞர் என்கிறார் ஹெச்.ராஜா. ஆனால் மோடி லெக்கின்ஸ் போட்டு நாடு நாடாக சுற்றுகிறார். இந்து என்பது எனது வழிபாட்டு அடையாளம் தான். மத்திய அரசு நீட்தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்துவிட்டனர், அவரவர் தாய் மொழியில் பேசுகின்றனர். நாம் மொழிகளுக்கே தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம். இந்த நாட்டு இளைஞர்களை, போதை மாத்திரைகளுக்கும், மதுபோதைக்கும் அடிமையாக வைத்து விட்டனர்.

அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்துவிட்டார் அண்ணாமலை. இரண்டு வருடத்தில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள். அண்ணாமலையிடம் தயவுசெய்து கேட்கிறேன், ஹெச்.ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கி கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் அவர் பேசி பேசியே பைத்தியம் ஆகிவிடுவார். காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்க ஹெச் ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன். அதைத் தான் ராஜா என்னிடம் எதிர்பார்த்தார்.
 

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை. வரலாற்றில் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்றுதான் உள்ளது. வீர சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள். ஈடு இணையற்ற இசைஞானி இளையராஜா தலித் என்பதற்காக எம்பி பதவி கொடுத்துள்ளனர். இதனை இளையராஜா தூக்கி எறிந்துவிட்டு துப்பியிருக்க வேண்டும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்'' என்றார்.

இதையும் படிக்க: `உறுதியளித்தபடி கவனித்து கொள்ளவில்லை’- முன்னாள் அமைச்சர் மீது துணை நடிகை குற்றச்சாட்டு