தமிழ்நாடு

“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் பிற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அவர் கூறினார். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 11 சென்டி மீட்டரும், கேளம்பாக்கத்தில் 10 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் மிதமாக மழை பெய்யும் என்றும், கடலோ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய தலைமுறையிடம் பேசினார். 

அப்போது, “இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவாகும் மழையளவு 440 மிமீ. இந்த இயல்பை விட அதிக மழை பதிவாகும். சென்னையிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு கடலோர மாவட்டங்கள் மட்டும் அதிக மழை பெற்ற நிலையில், இந்த ஆண்டு உள்மாவட்டங்களும் கூடுதல் மழை பெற வாய்ப்புள்ளது” என்றார்.

வடகிழக்கு பருவமழையின் சமீபகால வரலாறு

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் இயல்பான மழை அளவு 442 மிமீ. அதாவது 44 செமீ. கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 44 செமீ. ஆனால் 40 செமீ மட்டுமே மழை பெய்தது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும்.

கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவான மழை பதிவானது. அந்தக் காலகட்டத்தில் பதிவான மழை16 செமீ. கடந்த 2015 ம் ஆண்டு 67 செமீ மழை பதிவானது. இது இயல்பை விட 53 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு இயல்பை விட சற்றே கூடுதலான மழை பதிவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.