தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை: அமைச்சர் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

kaleelrahman

திருவாரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தியாகராஜர் கோவிலில் கமலாலயக் குளத்தின் தென்கரையில் 100அடி நீள சுவர் இடிந்து விழுந்தது மேலும் 300 அடி நீள சுவர் தற்போது விழும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கமலாலய குளத்தை ஆய்வு செய்து விரைவாக பணியை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பிறகு மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒவ்வொரு துறை அதிகாரியும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் பல்வேறு தொடர்புகளை வழங்கியுள்ளார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடிய பகுதிகளாக 212 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தயார் நிலையில் 249 நிவாரண முகாம்கள் உள்ளன. 622 பாலங்களும் 7017சிறு பாலங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள், குளம் தூர்வாரப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இதற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் உட்பட பலருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.