தாக்கிய கும்பல்
தாக்கிய கும்பல் புதியதலைமுறை
தமிழ்நாடு

சென்னை | பட்டப்பகலில் செல்ஃபோன் பறிக்க முயற்சி... தப்பிக்க முயன்ற வடமாநில இளைஞருக்கு கத்திகுத்து!

யுவபுருஷ்

செய்தியாளர் - ஆவடி நவீன் குமார்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, டாஸ் தொழிற்சாலை பகுதியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சுனில் என்பவர், 5 ஆண்டுகளாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் தன்னுடன் வேலை செய்யும் நரேஷ் என்பவரும் சாலையில் சென்று கொண்டிருந்தார் சுனில்.

அப்போது எதிரே வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். சுனில், தனது செல்போனை தர மறுத்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தவர்கள், அவரின் வயிற்றில் குத்தியுள்ளனர். வலது காதையும் வெட்டியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த சுனில், அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவரை மீட்ட உடன் வந்தவர் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி இருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதோடு, கத்தியால் குத்திய சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.