தமிழ்நாடு

வடசென்னை: நிலக்கரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி பலி

kaleelrahman

வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி கையாளுதல், கன்வேயர் பெல்ட் தூய்மைபடுத்துதல் என பல்வேறு பணிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராம் சிங் (24) என்பவர் கன்வேயர் பெல்ட்டில் நிலக்கரி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீஞ்சூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.