தமிழ்நாடு

தண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி

webteam

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தண்ணீர் குழாய்களில் நீர்வராததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை முக்கிய சுற்றுலா தளமாக திகழ்வது மெரினா கடற்கரை. அதிலும் குறிப்பாக அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மக்கள் தாகம் தீர்ப்பதற்காக மாநகராட்சி சார்பில், இலவச குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழாய்களில் தற்போது தண்ணீர் வருவதில்லை. இதனால் வெயிலில் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் அங்கிருக்கும் கடைகளில் காசுகொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்தத் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வரும்படி, மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.