விஜய பிரபாகரன் Pt web
தமிழ்நாடு

”சத்திரியனாக இருப்பதை விட, சாணக்கியனாக மாற வேண்டும்” - விஜய பிரபாகரன்!

எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கு பதவி ஆசை இல்லை என தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இன்னும் எந்தக் கூட்டணியிலும் சேராமலேயே இருந்து வருகிறது. ஏற்கனவே, ஜனவரி 9 ஆம் தேதி நடந்த தேமுதிகவின் ’மக்கள் உரிமை மீட்பு’ மாநட்டிலேயே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், அந்த மாநாட்டில் கடைசி வரை அந்த கூட்டணி அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடமும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தேமுதிக மாநாடு

அதேசமயத்தில், 20 தொகுதிகளை தேமுதிக கேட்டதாகவும் ஆனால், இருகட்சிகளும் 7 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட்டு என்ற அளவிலேயே தர முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த சூழலிதான், தேமுதிக இரு கட்சிகளிடம் இருந்து உரிய தொகுதிகள் கிடைக்காதபட்சத்தில் தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளது எனவும் பேசப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்க தேமுதிக காலம் தாழ்த்தி வருவதாக விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தான், தேமுதிக இளைஞர் அணிச்செயலாளர் விஜய பிரபாகரன் ”சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக மாற வேண்டும்; இன்னும் கொஞ்சகாலம் பொறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

​பல்லாவரம் அடுத்த பம்மலில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு, தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

​அப்போது அவர் பேசுகையில், "நாம் எப்போதும் சத்திரியனாக மட்டும் இருப்பதை விட, காலத்தின் தேவைக்கேற்ப சாணக்கியனாக மாற வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் மட்டும் பொறுமையாக இருங்கள்; விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

விஜய பிரபாகரன்

தொடர்ந்து அவர் பேசுகையில், எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எம்.எல்.ஏ, எம்.பி அல்லது அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை எனவும் மாறாக, கட்சிக்காக உண்மையாக உழைத்த ஒவ்வொரு தொண்டனையும் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பார்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் எனவும் தொண்டர்களிடையே உருக்கமாக பேசியிருக்கிறார்.