கோயில்களில் இலவச தரிசன பக்தர்களையும், சிறப்பு தரிசன பக்தர்களையும் ஒரே தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்களில் கட்டணம் செலுத்தும் பக்தர்கள் சுவாமி சிலைக்கு வெகு அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யவரும் பக்தர்கள் சுவாமி சிலைக்கு அருகில் கூடுதல் நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இதுபோன்ற சலுகை அளிக்கப்படுவதில்லை என்றும் வாதிட்டார். இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என வாதிட்டு சிறப்பு தரிசன முறைக்கு தடை விதிக்கவேண்டும் என கோரினார்.
இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சிறப்பு தரிசனம் முறையை தொடர அனுமதியளித்தனர். அதே நேரத்தில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களும், சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களும் ஒரே தூரத்திலிருந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.