தமிழ்நாடு

இறக்குமதி மணலை விற்க எந்த நபருக்கும் உரிமை இல்லை: தமிழக அரசு

இறக்குமதி மணலை விற்க எந்த நபருக்கும் உரிமை இல்லை: தமிழக அரசு

webteam

தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பனை செய்யும் உரிமை மாநில அரசின் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே இருக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி கட்டுமானப் பணிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை என்றும், இறக்குமதி மணலை விற்பனை செய்யும் உரிமை மாநில அரசின் பொதுப்பணித்துறையிடம் மட்டுமே நிலை பெற்றிருக்கும். இறக்குமதி செய்யப்பட்ட மணலை எந்த நபரும் அவரது சொந்த பயன்பாட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் மணலை இருப்பில் வைத்திருக்கும் உரிமை தமிழ்நாடு மாநில அரசின் பொதுப்பணித்துறையிடம் நிலை பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறக்குமதி மணல் பொதுப்பணித்துறை வரையறை செய்த குறியீடுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவ்வாறு குறியீடுகளை நிறைவு செய்யாத மணலை தமிழகத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்க பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மணல் காரணிகளை சார்ந்து மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலை வீதத்தில் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மிக்க போக்குவரத்து அனுமதியின்றி, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் கிடங்குகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல் கொண்டு செல்லப்படகூடாது. இதேபோல் டிரான்சிட் பாஸ் எனப்படும் அனுமதிச் சீட்டு இல்லாமல் பொதுப்பணித்துறை கிடங்கிலிருந்து மணலை கொண்டு செல்லக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.