தமிழ்நாடு

“பள்ளி மாற்று சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை”- பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

Rasus

பள்ளிகளில் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வழக்கமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில், மாணவர்களின் சாதி, மதம், இனம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் சில நேரங்களில் மாணவர்களின் சாதி தவறாக குறிப்பிடப்படுவதால் அவர்களின் மேல்படிப்பிற்கு சிக்கல் நிலவுவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே இந்தாண்டு முதல் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில், மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்துதான் மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மாற்றுச் சான்றிதழில், சாதிக்கான இடத்தில் எதையும் குறிப்பிட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. வருவாய்த் துறை வழங்கும் சாதிச் சான்றிதழ்தான் இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், பள்ளிகளில் அதனை குறிப்பிட அவசியமில்லை என தெரிவித்துள்ளது.