தமிழ்நாடு

"அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: அவர் மிகப்பெரியவர்"- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 

webteam

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் கை சின்னத்திலே போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை வைத்துள்ளார். மாவட்ட அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து தேவையான திட்டங்களை இந்த தொகுதிக்கு செய்வேன்.

சாய, ஜவுளி தொழிலுக்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கைகள் எடுப்பேன். வரும் 7 ஆம் தேதி அதிமுக வேட்புமனு தாக்கல் செய்வதை மாற்றியுள்ளனர். ஆனால் 8 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.

என்னை பொருத்தவரை கிழக்கு தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதற்காக போட்டியிடுகிறேன். எதிரில் யார் இருக்கிறார்கள் என பார்க்கவில்லை. அண்ணாமலை மிகப்பெரியவர். நான் சிறியவர். அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. திமுக அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அதிமுகவை பொருத்தவரை என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தேவையில்லை.

அதிமுக ஜெயக்குமார் சொன்ன புகார் எல்லாம் எனக்குத் தெரியாது. அவரே சிறை எல்லாம் சென்றிருக்கிறார் என்று கூறினார்.