தமிழ்நாடு

”பால் வாங்கிக் கொண்டு பணம் தராத ஆவின் நிர்வாகம்”

webteam

விருதுநகரில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகை  கடந்த 45நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  பால் கொள்முதல் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாரம்தோறும் வழங்கப்படும் பால் கொள்முதல் தொகையை வழக்கத்திற்கு மாறாக 45 நாட்களுக்கு மேலாகியும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டும் பால் உற்பத்தியாளர்கள் இதனால் கால்நடைகளை பராமரிக்கவும், தீவனம் வாங்க முடியாமலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கடும் வறட்சி காரணமாக கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதுடன் புண்ணாக்கு, சோளப்பயிர் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பாலுக்கான கொள்முதல் தொகை கிடைக்காமல் தீவனம் வாங்க முடியாமல் திணறி வருவதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிகின்றனர். தங்களின் நிலையை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பால் கொள்முதல் தொகையை ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பால் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு குறித்து ஆவின் நிர்வாக அதிகாரிகளிடம் நேரில் சென்று கேட்டபோது உரிய பதிலளிக்க மறுத்து விட்டனர்