நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தருவது தொடர்பாக டெல்லியில் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த தினகராஜன் ராஜாமணி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடர்ந்த மனுவில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்குப் பெறுவது தொடர்பான அவசர சட்டத்தை ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு அனுப்பியதாகவும் இது தங்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி கிடைக்கப்பெற்றதாகவும் சுகாதார அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது. மேலும் நீட்டிலிருந்து விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு தங்கள் அமைச்சகம் ஆதரவளிக்கவில்லை என்றும் சுகாதாரத்துறை துணை செயலாளர் அமித் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். நீட்டில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சகம் சார்பில் எந்தவொரு கூட்டமும் நடக்கவில்லை என அமித் பிஸ்வாஸ் விளக்கமளித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் ஆலோசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் டெல்லியில் முகாமிட்டு தமிழக அமைச்சர்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்ககள் வெளியான. இந்நிலையில் நீட்டில் இருந்து விளக்கமளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.