தமிழ்நாடு

டெல்டா பிளஸ் தொற்று பெரியளவில் பரவவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதால், அவர்கள் இருந்த பகுதியை 'கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 116ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அமைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், வெள்ளக்கோயில் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்டா பிளஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மையம் சென்னையில் 20 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா பிளஸ் தொற்று பெரியளவில் பரவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே பொதுமக்கள் இந்த புது திரிபு குறித்து, அச்சப்படவோ பதற்றமடையவோ தேவையில்லை.