தமிழ்நாடு

“நோ ஹெல்மெட்; நோ எண்ட்ரி” - சேலத்தில் புதிய திட்டம் அறிமுகம் 

webteam

“நோ ஹெல்மெட்; நோ எண்ட்ரி” என்ற புதிய திட்டம் சேலம் மாநகரில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

உயிர் காக்கும் ஹெல்மெட் அணிவதை கட்டாய பழக்கமாகக் கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல ஹெல்மெட்டையும் தவறாமல் எடுத்து செல்வது கட்டாயம் எனவும் காவல்துறை அறிவுரை கூறிய வண்ணம் உள்ளது. இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும்போதும் சந்தைக்கு செல்லும்போதும் ஹெல்மெட் கட்டாயம் எனவும் காவல்துறை அறிவுறுத்துகிறது. 

ஹெல்மெட் அணியாமல் 90 சதவீத இளைஞர்கள் விபத்துகளில் சிக்குவதாகவும் அந்த விபத்துகளை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெல்மெட்டின் அவசியத்தை முதல் கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின் கீழ் சுந்தர் லாட்ஜ் மற்றும் அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகள் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. "நோ ஹெல்மெட்; நோ எண்ட்ரி" என்ற புதிய திட்டம் சேலம் மாநகரில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.