தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளுடன் ஆதரவுடன் தவெகவின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். முதலில் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்த ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் தற்போது அமைச்சரவையில் பங்கேற்றிருக்கிறது.
அதேபோல, தாங்கள் தான் ஆதரவளிக்க கூட்டணி கட்சிகளை அனுப்பி வைத்தோம் என்ற கருத்தை திமுக அடிக்கடி கூறி வரும் நிலையில், அதை மறுத்திருக்கின்றன கூட்டணி கட்சிகள். இந்தசூழலில் தான், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன. விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி முடிவை அறிவிப்போம் எனக் கூறியிருக்கிறார். மறுபுறம் இந்த ஆட்சி நீடிக்காது என திமுக தலைவர் ஸ்டாலினும் தொடர்ந்து கூறிவருகிறார். அதே போல இந்தியா கூட்டணி கூட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை.
இந்தசூழலில், திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் புதிய கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.
இதற்கிடையில், ஆட்சி விரைவில் கவிழும் எனக் திமுகவினர் கூறிவரும் நிலையில் தான், முதல்வர் விஜய் தலைமையில், நாளை தவெக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு, ஐயூஎம்எல், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட ஆதரவுக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், திமுக வைத்து வரும் விமர்சனங்கள் குறித்தும், தவெகவின் கூட்டணி கட்சிக் கூட்டம் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ”தவெகவிற்கு ஆதரவளித்திருக்கும் கட்சிகள் வாக்கு தவற வாய்ப்பில்லை. இடதுசாரிகளின் நிலைபாடும் தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்பது தான். விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் தவெகவிற்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றுவார்கள். காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியை உறுதிபடுத்திவிட்டார். எனவே, தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
நாளை நடைபெறும் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேநீர் விருந்து என்ற அடிப்படையில் தான் அழைத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில், நான் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவிருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.