தமிழ்நாடு

ஆலங்குடி: பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவிகள் 7 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலம்

webteam

ஆலங்குடியில் குறித்த நேரத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 7 கிலோமீட்டர் வரை நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் இவர்கள், மீண்டும் பேருந்துகளிலேயே ஊருக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் ஆலங்குடியில் இருந்து நம்பம்பட்டி மாங்கோட்டை செம்பட்டிவிடுதி வழியாக கறம்பக்குடிக்கு இயக்கப்படும் அரசு பேருந்து கடந்த சில மாதங்களாக மாலை மற்றும் காலை வேலைகளில் குறித்த நேரத்துக்கு இயக்கப்படவில்லை, இதனால் பேருந்து வசதியின்றி மாணவ, மாணவிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதையடுத்து இன்றும் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 8 நம்பர் என் கொண்ட நகர பேருந்து வழக்கமாக இயக்கப்படும் நேரத்தை விட 10 நிமிடம் முன்கூட்டியே ஆலங்குடியில் இருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி முடித்து வந்த மாணவ மாணவிகள், இந்த வழித்தடத்தில் வேறு பேருந்துகள் இல்லாத காரணத்தாலும் மாற்று பேருந்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் 7 கிமீட்டர் தூரம் வரையில் நடந்தே சென்றனர்.

இந்த காட்சி காண்பவர்களை பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் வசதிக்காக இவ்வழிதடத்தில் பேருந்து இயக்க நீண்ட காலத்திற்கு பின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் அதே பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்தினார்கள் அதிக கூட்டம் சேருவதாக குறித்த நேரத்திற்கு பேருந்து இயக்காமல் முன்கூட்டியே எடுத்துச் செல்வது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.