தமிழ்நாடு

11 மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வந்தார் நிர்மலாதேவி

11 மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வந்தார் நிர்மலாதேவி

webteam

 11 மாத சிறைவாசத்திற்குப் பின் மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் இன்று வெளியே வந்தார். 

கல்லூரி மாணவிகளை தறவாக நடத்த முயன்ற வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை அவருக்கு ஜாமீன் மறுக்கபட்ட நிலையில், மதுரை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி, யாருக்காக அவ்வாறு பேசினார் என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்கவில்லை எனவும், ஆகையால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி வழக்கு தொடர்ந்தார். அதேபோல், நிர்மலாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மற்றொரு வழக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.

ஜாமீன் கோரிய வழக்கு மார்ச் 12ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கோ, தனிநபருக்கோ பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிர்மலா தேவி சிறையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் அவருக்கு இரண்டு பேர் ஜாமீன் கொடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு யாரும் ஜாமீன் கொடுக்க முன்வரவில்லை என்று செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நிர்மலாதேவி தரப்பில் ஜாமீன் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நிர்மலாதேவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 2 நபர் ஜாமீனை நீதிபதி மும்தாஜ் ஏற்றுக்கொண்டார். உயர்நீதிமன்றம் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதை நேற்று கீழமை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.