தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தாலும் 47 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது அதிமுக. இந்தசூழலில், கே. பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியில், எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவளித்திருந்தது. எனினும், இருதரப்பிடையேயும் தற்போது, சமாதானம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனாலும், அதிமுக எம்.எல்.ஏ-கள் 4 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாடி வருகின்றனர். இந்தநிலையில், இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள அவர், ”எடப்பாடியும் ஸ்டாலினும் இணைந்து ஆட்சியை கொண்டுவர முயற்சி செய்ததால் தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். ஸ்டாலின் குடும்பமும் எடப்பாடி குடும்பமும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்தபோது இந்த பிரச்சனை நடந்துள்ளது. அது அதிமுக மற்றும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை, எனவே அதனை பிடிக்காமல் இவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள் அதுதான் நடந்த உண்மை என கூறினார். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள முயலும் ஒரு கட்சியை எப்படி தொண்டர்களும் எம்எல்ஏக்களும் எப்படி மதிப்பார்கள் எனவும் மற்ற தலைவர்கள் அவர்களை எப்படி மதிப்பார்கள் என தெரிவித்தார்.
அதேபோல, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது அவர்களது தனிப்பட்ட முடிவு எனவும் அந்தக் கட்சியின் தலைவரை நம்பி பயணிக்க முடியாது என அவர்கள் கட்சியிலிருந்து வெளியே வந்த பதவியை ராஜினாமா செய்கிறார்கள், இதில் என்ன தவறு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். எங்கும் எந்த பேரமும் பேசவில்லை 100 சதவீதம் அது உண்மை. இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என முயற்சி எடுத்த போது தான் பிளவு வருகிறது. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளும் இதன் காரணமாக தான் வெளியே வந்தனர். எந்த இடத்திலும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை; பெரும்பான்மை நிரூபித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். அதிமுக நீதிமன்றம் சென்றால் அதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.