தமிழ்நாடு

நீலகிரி: மழை வேண்டி குறும்பர் பழங்குடியின மக்கள் நடத்திய பாரம்பரிய திருவிழா

kaleelrahman

முதுமலையில் மழை வேண்டி பாரம்பரிய திருவிழாவை குறும்பர் பழங்குடியினர் நடத்தினர். தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி அவர்கள் குல தெய்வத்தை வழிபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் வசித்து வருபவர்கள் குறும்பர் பழங்குடியின மக்கள். இவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாத காலமாக மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கடும் வறட்சி காரணமாக விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இந்த பழங்குடி மக்களால் சரியான முறையில் விவசாயம் செய்ய முடியவில்லை.

இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் ஆற்றை ஒட்டியுள்ள குறும்பர் பழங்குடியின மக்களின் குலதெய்வமான ஸ்ரீ பொம்ம தேவர் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடத்தினர். அப்போது குறும்பர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக நடனமாடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.