தமிழ்நாடு

நீலகிரி: புலி நடமாட்டத்தால் வீடுகளில் முடங்கிய மக்கள் - உணவுப்பொருட்கள் வழங்கும் அரசு

Veeramani

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, புலி ஊருக்குள் புகுந்ததால் அச்சத்தில் பணிக்குச் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.

தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, புலியைப் பிடிக்கும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, அங்குள்ள 120 குடும்பங்களுக்கு, சுமார் ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புலியைப் பிடிக்கும் முயற்சி தொடர்வதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.