NIA
NIA PT DESK
தமிழ்நாடு

தமிழகத்தில் சென்னை, திருச்சி உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை: என்ன காரணம்?

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

NIA

தீவிரவாத செயலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இந்த அமைப்பின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில், தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை, திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் ஓட்டேரி, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகின்றன.

போலவே சென்னை திருவொற்றியூரில் தாங்கல் புதிய காலனி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வீட்டில், தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனையில், அப்துல் ரசாக் புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கடந்து எட்டு மாதங்களுக்கு முன்புதான் இவர் தாங்கல் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடியேறி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சோதனையையொட்டி அப்துல் ரசாக்கின் வீடு அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

NIA

இந்த அப்துல் ரசாக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை போலவே மதுரையிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அங்கு சோதனைக்குப்பின் இருவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அதன்படி மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியும், முன்னாள் SDPI கட்சி நிர்வாகியுமான அப்பாஸ் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை முதலாக சோதனை நடத்தினர். பின் அப்பாஸை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேபோன்று தெப்பக்குளம் பகுதியில் உள்ள தமிழன் தெரு பகுதியில் யூசுப் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதேபோல திருமங்கலத்திலும் என்ஐஏ அதிகாரிகள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பழைய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.