தமிழ்நாடு

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கோவை நபர் கைது

webteam

இலங்கை தாக்குதலுடன் தொடர்புடையவர்களுடன் செய்திகளை பரிமாறியதாக எழுந்த குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளி முகமத் ஹசாருதீன் கைது செய்யப்பட்டார். 

இலங்கை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், செல்போன்கள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கை தாக்குதலில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக என்.ஐ.ஏ.தரப்பில் தகவல் வெளியாகியது. கோவையைச் சேர்ந்த அசாருதீன், இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவருடன் தொடர்பு வைத்திருந்தார் என என்.ஐ.ஏ தரப்பில் கூறப்பட்டது. முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய கலிஃபா ஜி.எப்.எக்ஸ் என்ற குழுவை தமிழக இளைஞர்கள் நடத்தி வந்ததாகவும் என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர் விசாரணைக்கு பின்னர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமத் ஹசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.