தமிழ்நாடு

ஐ.எஸ் இயக்கத்துடன் தமிழக இளைஞர்களுக்கு தொடர்பு? - என்.ஐ.ஏ தகவல்

rajakannan

இலங்கை தாக்குதலுடன் தொடர்புடையவர்களுடன் கோவையைச் சேர்ந்த 6 பேர் செய்திகளை பரிமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், செல்போன்கள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இலங்கை தாக்குதலில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக என்.ஐ.ஏ. தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த அசாருதீன், இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவருடன் தொடர்பு வைத்திருந்தார் என என்.ஐ.ஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது. முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய கலிஃபா ஜி.எப்.எக்ஸ் என்ற குழுவை தமிழக இளைஞர்கள் நடத்தி வந்ததாகவும் என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.