தமிழ்நாடு

செய்தி எதிரொலி: இரவோடு இரவாக புதுப்பொலிவு பெற்ற திருவாரூர் கருணாநிதி பேருந்து நிலையம்

kaleelrahman

புதிய தலைமுறை செய்தி எதிரொலி காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் புதுப்பொலிவு பெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் தற்போது நகர பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் இயங்கிவரும் இந்த பேருந்து நிலையம், சுகாதாரமற்ற முறையில் குப்பை கூளங்கள் நிறைந்து மது குடிக்கும் இடமாக மாறி இருப்பதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் நீர் வெளியேறும் வடிகால்கள் முழுவதுமாக தூர்வாரப்பட்டு சரிசெய்யப் பட்டது.

இதையடுத்து அங்கு வந்த திருவாரூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி ரவீந்திரன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர், நகராட்சி ஆணையர் பிரபாகரன் திருவாரூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், குண்டும் குழியுமாக உள்ள திருவாரூர் பழைய பேருந்து நிலைய சாலை சரி செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.