தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்: ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கு நன்றி - டிஜிபி சைலேந்திர பாபு

kaleelrahman

புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்தது தொடர்பாக பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'இன்று (01.01.2022) ஆங்கிலப் புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின்போது சாலை விபத்துகள் மற்றும் இதர அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

இரவு மற்றும் 01.01.2022 காலை புத்தாண்டு தின கொண்டாட்டங்கள், ஓரிரு சாலை விபத்துக்கள், ஓரிரு சச்சரவுகள் தவிர, தமிழகம் எங்கும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடந்து முடிந்தன. 31.12.2021 அன்று காவல்துறை வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.