தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பயணக் கட்டணம் உயர்வு

webteam

கோவை மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பர்.

இந்நிலையில் இன்று முதல் இந்த மலை ரயிலின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் வகுப்பு பயணத்திற்கு முன்பதிவு கட்டணம் 470 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், முன்பதிவில்லா பயணக் கட்டணம் 395 ரூ‌பாயில் இருந்து 520 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணம் ரூ.145-இல் இருந்து 295 ரூபாயாகவும், முன்பதிவில்லா பயணக் கட்டணம் ரூ.75-இல் இருந்து 175 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மலை ரயில் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கு ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் வரை செலவாகும் நிலையில் வருவாய் நான்கு கோடியாக உள்ளது. எனவே, இழப்பை குறைக்கவே இந்த கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.