தமிழ்நாடு

புரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு

webteam

வங்கக்கடலில் உருவாக உள்ள புயலானது, டிச.4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி  பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர் புயலைத்தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக மாற உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாக உள்ள புரெவி புயல் டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் டிசம்பர் 2ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப்புயலால், தென் தமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் நாளை புயல் கரையைக் கடக்க இருப்பாதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.