தமிழ்நாடு

இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு 

webteam

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது.

வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவரது கார் மோதிவிட்டதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாண்டியனின் காரை ஓட்டிச்சென்ற அவரது ஓட்டுநர் காவல் நிலையத்துக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 10 பேர் பாண்டியனின் கார் மற்றும் காவல் நிலையத்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்தக் கும்பல் பாண்டியனின் காருக்கு தீவைத்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அவர்களை வன்முறைக் கும்பல் தடுத்து நிறுத்தியதால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலை தடுக்க முடியவில்லை. கலவரத்தில் காயமடைந்த பாபுராஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு பேருந்து நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை உடைத்ததால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது.