தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து

புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து

webteam

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் கலைக்கப்பட்ட நிலையில், இதில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், விசாரணை ஆணையம் திரட்டிய ஆவணங்களை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் தனர். 

இவ்வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் 629 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்யப் பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறினார். எனவே இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது சரியே என அவர் வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம், விசாரணை குறித்த அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யாத நிலையில், அதனை லஞ்ச ஒழிப்புத்துறை மாற்றி உத்தரவிட்டது தவறு என தெரிவித்தார். அதனால், புதிய தலைமைச் செயலக விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றும் அரசாணையை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.