தமிழ்நாடு

திருமணமான 15வது நாளில் மனைவிக்கு குழந்தை : அதிர்ச்சியடைந்த கணவர்

webteam

கிருஷ்ணகிரியில் புதிதாக திருமணமான பெண்ணுக்கு 15வது நாளில் ஆண் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உருகே கலைஞர் நகரை சேர்ந்த அஜீஸ். இவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமண தரகர் மூலம் பெற்றோர்களால் பெண் பார்த்து, 15 நாட்களுக்குமுன் உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான நாளில் இருந்தே பானு அஜீஸை நெருங்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் வயிற்று வலியை காரணமாக அவர் கூறி வந்துள்ளார். 

இதையடுத்து வயிற்றுவலிக்கு மருத்துவரை காண ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு மனைவியை அஜீஷ் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது வயிற்று வலி அதிகமாக இருப்பதாக கூறி கழிப்பறைக்கு சென்ற பர்வீன் பானுக்கு, அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட கணவன் விரக்தியில் மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்களும் பர்வின் பானு பிரசவத்திற்காக அனுமதிக்கவில்லை. இருப்பினும் கையில் குழந்தையுடன் அவர் இருப்பதால் பதட்டத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் தான் பானுவைப் பற்றிய தகவல்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. அவர் திருமணம் ஆகி 15 நாட்கள் மட்டுமே ஆனவர் என்பதை அறிந்ததும் மருத்துவமனையே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்து, பிறப்பு சான்றிதழ் கொடுக்கவேண்டிய சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் குழம்பியுள்ளது. பின்னர் தர்மபுரியில் இருந்து வரவழைக்கப்பட்ட பானுவின் உறவினர்களிடம் குழந்தையையும், அதன் பிறப்பு சான்றிதழையும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.