தமிழ்நாடு

விழுப்புரம்: சாலையோரத்தில் கிடந்த பெண் குழந்தை மீட்பு

Sinekadhara

விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் பிறந்த இரண்டே நாளான பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கம் என்கிற கிராமத்தில் சாலை ஓரத்தில் நேற்று இரவு பிறந்து இரண்டே நாட்களான ஒரு பெண் குழந்தை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து சென்று குழந்தையை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தை எப்படி அங்கே வந்தது? யார் குழந்தையை அங்கு கிடத்திவிட்டு போயிருக்கிறார்கள்? என்கிற கோணத்தில் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.