நெல்லையில் அபராதம் வசூலிப்பு அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு, வழக்கமாக வசூலிக்கப்படும் அபராதத்தை விட அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் அதிக அபராதம் வசூலித்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து அங்கு தற்காப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
காவலர்கள் குவிக்கப்பட்ட பின்னரும், மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.