நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தில் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடு குறித்து கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஆர்டிஐ, மாவட்ட நெஞ்சிலுவைச் சங்கத்தில் ரூ.80 லட்சம் அளவிற்கு முறைகேடு நடந்ததை உறுதி செய்துள்ளது. மேலும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்ததிலும், மருத்துவமனைகளில் உள்ள ஆதரவற்றோரின் சடலங்களை வாங்கி எரித்ததிலும் செஞ்சிலுவை சங்கம் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம் ஆகியுள்ளது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் செஞ்சிலுவை சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரம்மா நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்க முன்னாள் தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிய நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.