நெல்லையில் முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிபெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். குறிப்பாக கொலை நடத்து 5 நாட்கள் ஆன நிலையில் 5 நாட்களும் கிடைக்கப்பெற்ற பல்வேறு தகவல்களை சேகரித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைக்கப்பெற்ற இரத்த மாதிரிகள், கைரேகைகள், அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் போன்றவற்றை கொண்டு பலரிடம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளனர். 5 நாட்கள் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து 6வது நாளான இன்று மீண்டும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் மற்றும் இரத்த சொந்தங்களிடையே மீண்டும் விசாரணையை தொடங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் சேகரிக்கப்படும் தகவல்கள் வெளியே தெரிந்தால் விசாரணை பாதிக்கும் என்பதால், காவல்துறையினர் இரகசியமாக பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.