தமிழ்நாடு

நெல்லை புத்தகக் கண்காட்சி: வாசிப்பு இயக்கத்தில் நரிக்குறவர் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு

sharpana

நெல்லை புத்தகத் திருவிழாவில் உலக சாதனைக்கான தொடர் வாசிப்பு இயக்கத்தில் நரிக்குறவர் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கடந்த 17 ஆம் தேதி முதல் நெல்லையில் நடைபெற்று வரும் பொருநை புத்தகத் திருவிழா நாளையுடன் முடிவடைகிறது. மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் புத்தகத் திருவிழாவில் உள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டப் பின் தாங்கள் படிக்க விரும்பும் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். சிலர் புத்தக அரங்குகளில் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வசதியாக, உலக சாதனைக்கான புத்தக வாசிப்பு இயக்கம் புத்தக கண்காட்சி நடைபெறும் வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

உலக சாதனைக்கான புத்தக வாசிப்பில் பங்கேற்க மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் முன்பதிவு செய்து பங்கேற்கின்றனர். கண் தெரியாதவர்களும், காது கேளாதவர்களும் இதில் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தனர். பத்தாம் நாளான இன்று வள்ளியூர், பேட்டை பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் குழந்தைகள் இந்தப் புத்தக வாசிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தும், படங்கள் வரைந்தும் பங்கேற்றனர்.

விளிம்புநிலை மக்களும் புத்தக வாசிப்பில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. கலந்துகொண்ட மாணவர்களுக்கு பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அரங்கத்தில் அமர்ந்து புத்தகங்கள் படித்தும் , படங்கள் வரைந்தும் தொடர் வாசிப்பு இயக்கத்தில் நரிக்குறவர் குழந்தைகள் தங்களை இணைத்துக் கொண்டனர்.