தமிழ்நாடு

சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்

webteam

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார். அவருக்கு வயது 50.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர், நெல் ஜெயராமன். இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர். ஆண்டுக்கொருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி வந்தார். அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்ப பெற்று அதனை மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தி சாதனை செய்தார். 

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இன்று காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.