தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு

rajakannan

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியானது. அதில் நான் 382 மதிப்பெண்களை பெற்று இந்திய அளவில் 6704 ஆவது இடத்தை பிடித்திருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னர், அதிகாரிகள் திருப்தி அடைந்ததன் பேரிலேயே இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேர்ந்தேன். 

இந்நிலையில் தீவிர மனநலப் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி செப்டம்பர் 12ஆம் தேதி படிப்பை நிறுத்தி முடிவெடுத்தேன். செப்டம்பர் 17ஆம் தேதி ஊடகங்களில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக செய்தி வெளியானது. அவர்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்று செல்போனில் எடுக்கப்பட்டது மற்றொன்று ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. ஆகவே, இரு புகைப்படங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலும் அதை ஏற்கவில்லை. 

தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் என் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் 20 வயதே நிரம்பியவர் என்பதால், கைது செய்யப்பட்டால் எனது எதிர்கால வாழ்வு வீணாகும் நிலை உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை குழுவினரிடமும் உள்ளது. அதோடு வழக்கு தொடர்பாக எல்லாவித ஒத்துழைப்பையும் வழங்க உறுதி கூறுகிறேன். ஆகவே தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.