காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணை செய்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி ஜெயராஜ் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்துப் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், “தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் முத்து ராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். அவரை தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம். இவ்வழக்கில் சிபிசிஐடி நியாயமாக விசாரித்து வருகிறது.இதில் அரசியல் தலையீடு இல்லை. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினரால் பாதிக்கப்படும் மக்களின் வழக்குகளை உடனடியாக விசாரிக்கச் சரியான, நிலையான அமைப்பு வேண்டும் என்ற கருத்தை மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் " சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வதுக்குப் போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.