சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கவிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும் இன்னும் எந்தக் கட்சிகளும் தவெகவுடன் கூட்டணியில் இணையவில்லை. ஆனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில்தான், தொடச்சியாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து, 39 தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுகவை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், 25 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்கு கொடுக்க திமுக முன்வந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதிருப்தியின் காரணமாக காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமாரிடம், ’’தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா’’ உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அப்போது பதிலளித்துப் பேசிய அவர், ”காங்கிரஸ் இல்லாமல் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பில்லை. காங்கிரஸ் கூட்டணிக்குள் இல்லையென்றால், 25 இடங்கள்கூட திமுகவால் வெற்றிபெற முடியாது. அதிமுக மற்றும் திமுக கூட்டணி உறுதியானது எனச் சொல்ல முடியாது; தேர்தல் இறுதி கூட்டணி மாறலாம். தவெக மீது உள்ள அச்சத்தின் காரணமாகத்தான் தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரையும் கூட்டணிக்கு அழைத்துள்ளது திமுக. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்பதை காலம் பதிலளிக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் நேற்று பிற்பகலில் ஹைதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்தான ரகசிய சந்திப்பு நடைபெற இருக்கிறது என தகவல் வெளியாகவிருக்கிறது. இதன்மூலம், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.