தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் துப்பாக்கிச் சூடு அடுத்த சில தினங்களுக்கு தூத்துக்குடியில் பதட்டமான சூழலை உருவாக்கியது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து மனித உரிமைகள் ஆணையம் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தியது. காயப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று முடித்து வைத்தது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இழப்பீடு தொகைகளும், தமிழக அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் போன்ற நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில் அது வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்துள்ளது.