தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

kaleelrahman

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத், திமுக கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிடம் குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், டெல்லி எஜமானர்கள் அனுமதியோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். பாஜக மாநில கட்சிகளை வாழ விட்டதாக வரலாறு இல்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகியுள்ளார். பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த பணத்தில் பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் கொம்பு சீவி கட்சியை உடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அழிந்து வரும் அதிமுகவை பிஎஸ், இபிஎஸ் இருவராலும் காப்பாற்ற முடியாது என்றவரிடம்... அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் பிரச்னை தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது என்ற கேள்விக்கு... இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம். இரட்டை இலை சின்னத்தை முடக்கி அங்கே பாஜக அமர முயற்சிக்கிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் பாஜகவை வரவிட மாட்டோம்" என தெரிவித்தார்.