தமிழ்நாடு

நாமக்கல்: அரசு போக்குவரத்துக் கழகத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துநர்

kaleelrahman

நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசுப் பேருந்தில் நடத்துநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழனியப்பனுர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். சேலம் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வந்த இவருக்கு, இளையராஜா என்ற மகனும், இளையராணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் முனியப்பன் உயிரிழந்தார்.

இதையடுத்து வாரிசு அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்காக இளையராணி பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளையராணிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த ஒருமாத காலமாக போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இதைத்தொடர்ந்து இளையராணி ராசிபுரம் பணிமனையில் நகர பேருந்து நடத்துநராக நியமிக்கப்பட்டார். பெண் நடத்துநர் நியமிக்கப்பட்டதை அடுத்து அவரை பலரும் பேருந்தில் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து இளையராணி கூறுகையில் எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் போதும். இதனால்தான் நடத்துநராக ஆர்வத்துடன் பணியாற்றி வருவதாக இளையராணி கூறினார். இவர், நாமக்கல் மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்பது குறிப்பிடத்தக்கது.