தமிழ்நாடு

நாமக்கல்: தொழில் நிறுவனங்களில் வேலை செய்த 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

webteam

நாமக்கல்லில் செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் 29 பேர் மீட்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துகாபட்டி, படைவீடு, பெருமாபட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்கள் மற்றும் தொழில் கூடங்களில், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவ ஆண்கள், பெண்கள் பணி புரிவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்கு வந்த ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், சைல்டு லைன் உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 13 வயதுடைய 2 பெண் குழந்தைகள், 16 வயதுடைய 7 ஆண், 20 பெண் வளரிளம் பருவத்தினர், என 29 பேரை மீட்டனர். அந்த நிறுவனங்கள் மீது குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங், அவர்களின் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார் மேலும் மீட்கப்பட்ட குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் செங்கல் சூளைகள், கோழிப் பண்ணைகள், ஸ்பின்னிங் மில்ஸ், உணவு நிறுவனங்கள் உட்பட தொழில் இடங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளபடும். ஆங்கு குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.