தமிழ்நாடு

நாமக்கல்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை – நண்பரிடம் போலீசார் விசாரணை

webteam

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் வைத்து குத்திக் கொலை. தொழில் போட்டியால் கொலையா என நண்பர் ஒருவரிடம் நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் திருச்சி சாலை ஜெய் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது நண்பர் ஒருவருடன் டாஸ்மார்க் மதுபான பாரில் இரவு 10 மணி வரை மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் இருவரும் வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் குமரேசனை அவரது நண்பர், கத்தியால் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதனைக் கண்ட மதுபான பாரில் வேலை செய்த சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பரை பிடித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா எனவும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.