செய்தியாளர்: எம்.துரைசாமி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள், விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று கடந்த சில தினங்களாக பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நேற்று பணி முடிந்து சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்த ரயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திபலகானூர் அருகே வந்த போது, ரயிலில் பயணித்த நபர் ஒருவர் தவறி விழுந்ததாக பயணி ஒருவர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனார். ஆதில், அவர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சங்கர் (40) என்பதும் இவர், நண்பர்கள், உறவினர்களுடன் பணிக்கு சென்று விட்டு ரயில் படிக்கட்டில் பயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்ததும் தெரியவந்தது.
இதனைடுத்து சேலம் ரயில்வே காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.