செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியை ஒட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோயில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோயிலுக்கு ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்வதோடு, மலைவாழ் குடும்பத்தினரே கோயில் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு வருடம் தோறும் தை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமபந்தி விருந்து நடைபெறும்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில், 28 ஆடுகள், 29 சேவல்கள், 28 பன்றிகள் என முப்பூஜை செய்து பலியிடப்பட்டது. கடந்த ஆண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ப.சிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்று சமையல் செய்தனர். இதையடுத்து சமைத்த அசைவ உணவை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது.