உடனடியாக வீடு காலி செய்யும்படி அரசு கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன் என புதிய தலைமுறையிடம் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதர் பொதுவாழ்க்கையில் எந்தளவுக்கு நேர்மையாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்து வருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் நன்கு அறியப்பட்டவர். ஆர்.என்.கே என அழைக்கப்படும் அவர், சுதந்திர போராட்டம் தொடங்கி, மாணவர் பருவத்திலேயே அரசியல் பிரவேசம் செய்தவர். நீண்ட காலம் அரசியல் களத்தில் பயணித்து வருகிறார். மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக களத்திலும், நீதிமன்றத்தில் போராடி வருகிறார்.
தமக்கென ஒரு சொந்த வீடு இல்லாத காரணத்தால், கடந்த 2006-ம் ஆண்டுமுதல், சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வசித்து வந்தார்.
இதனிடையே தற்போது அந்த வீட்டில் இருந்து வெளியேறி, கே.கே.நகரில் வாடகை வீடு ஒன்றில் குடியேறி உள்ளார் நல்லகண்ணு. காரணம், அவர் வசித்து வந்த இடத்தில் புதிய திட்டம் வருவதாக கூறி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதே. குடியிருப்பு வாடகை வீடுகளை காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டதை அடுத்து, மாற்று வீடு ஏதும் கேட்காமல் அங்கிருந்து காலி செய்துக்கொண்டு வெளியேறியுள்ளார் நல்லகண்ணு. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவருக்கு உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய நல்லகண்ணு, “ எனக்கு வீடு இல்லை என்றாலும் கக்கன் வாரிசுகளுக்கு அரசு உடனடியாக வீடு வழங்க வேண்டும். எனக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.