நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல்? – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் நடப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பிவருகிறது. இதை மக்கள் வரவேற்கும் நிலையில், சட்டமன்றத்தில் சாதி, மத விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து, தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்துகிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிஅமைத்தது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் ச. ஜோசப் விஜய். இந்த சூழலில் இதற்கு முன்பு இல்லாதவகையில், சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் மக்கள் பார்க்கும்வகையில் நேரடியாக தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தநிலையில் ஒவ்வொரு சட்டமன்ற விவாதங்களும், வைக்கப்படும் கோரிக்கைகளும் பொதுமக்களின் பார்வைக்கு உடனுக்குடன் தெரியவரும் நிலையில், அனைத்துதரப்பு மக்களும் சட்டமன்றத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை பார்த்து வருகின்றனர். தவெக அரசின் இந்த நடவடிக்கை பெரும்பாலான மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்

இந்தசூழலில் தான் சட்டமன்றத்தில் மத அரசியல் நடப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், தமிழக சட்டமன்றத்தில் சாதி, மத விவகாரங்கள் முன்னிலைப் படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தாம் சார்ந்த மதத்தை முன்னிலைப்படுத்தி இடஒதுக்கீடு கோருவதாகவும், த.வெ.க. அரசு சிறுபான்மையினருக்கான அரசு என முதல்வர் விஜய் முன்னிறுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமைச்சர் மரியவில்சன் சட்டமன்றத்தில் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதாகவும், பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுவதாகவும் குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், தனிப்பட்ட சாதி, மத நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல் அதன் மாண்பை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.